
கடலூர்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக ஜெயலட்சுமி உள்ளார். தலைமை காவலரான சிவசக்தி எழுத்தர் பணியை கவனித்து வந்தார். இந்த நிலையில், இவர்கள் இருவரும் பெண் வன்கொடுமையில் ஈடுபட்டவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அத்துறையை சேர்ந்த போலீசார் பெண் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, தலைமைக் காவலர் சிவசக்தி ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.