பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் நெருக்கடியை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட புறவழிச்சாலையில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அச்சடைகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோடுகளான பல்லடம் ரோடு, கோவை ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட ரோடுகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. இந்த ரோடு வழியாக நகர் பகுதிக்கு அதிகளவு வாகனங்கள் வருவதால், அடிக்கடி விபத்து மட்டுமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதிலும், நகரில் தேர்நிலை பகுதி மற்றும் மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு, நியூஸ்கீம் ரோடு, வெங்கட்ரமணன் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், போக்குவரத்து நெரிசலால் பிற வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை உண்டாகிறது. இதையடுத்து, நகர் வழியாக கோவை, பல்லடம், தாராபுரம், மற்றும் உடுமலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் விரைந்து செல்ல வசதியாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
இந்த புறவழிச்சாலையானது, உடுமலைரோடு திப்பம்பட்டியிலிருந்து துவங்கி அனுப்பர்பாளையம், ஆலாம்பாளையம், தொப்பம்பட்டி, குள்ளக்காபாளையம் வழியாக கோவை ரோடு ஆச்சிப்பட்டி வரை என சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய ரோடு அமைக்கப்பட்டதுடன், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பே போக்குவரத்து துவங்கப்பட்டது.
இதனால், இந்த வழித்தடத்தில் பகல் மற்றும் இரவு நேரம் என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. தற்போது, இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை கிழக்கு வட்ட புறவழிச்சாலை வழியாக செல்கிறது. ஆனால், வாகனங்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில், புறவழிச்சாலை அமைக்கப்பட்ட முக்கிய இடங்களில் உயர் மின்கம்பம் ஏற்படுத்தி மின்விளக்கு அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நான்கு ரோடு சந்திக்கும் சில இடங்களில் உயர் மின்கோபுரம் ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். அதுமட்டுமின்றி புறவழிச்சாலையில் வளைவுகள் அதிகம் உள்ள பகுதி மட்டுமின்றி வாகனங்கள் விரைந்து செல்லும் பகுதியிலும் என பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் உள்ளன.
குடியிருப்புகள் இருக்கும் இடத்தை தவிர, பிற பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, திப்பம்பட்டியிலிருந்து துவங்கி கோவை ரோடு ஆச்சிப்பட்டி வரை உள்ள புறவழிச்சாலையின் முக்கிய இடங்களில் உயர் மின்கோபுரமும், இருள் சூழ்ந்த பகுதிகளில் மின்கம்பம் ஏற்படுத்தி, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க மின்விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பொள்ளாச்சி நகரில் கிழக்கு புறவழிச்சாலை பகுதியில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.