சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இன்று வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. இன்று 02.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,20,807 மாணவர்களும் 1,00,579 மாணவிகளும் ஆக மொத்தம் 2,21,386 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு கல்லூரியிலும் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்பவும், நவீன தொழில்நுட்பத்திற்கேற்பவும், 12 பாடப்பிரிவுகள் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 54 கூடுதல் இடங்களில் அரசுப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவார்கள். 06.06.2025 வரை விண்ணப்பப் பதிவு செய்ய காலம் உள்ளதால் மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பொறியியல் சேர்க்கைக்கான தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம்
மேலும், மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்
The post பொறியியல் சேர்க்கை 27 நாட்களில் 2,81,266 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளனர்: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் appeared first on Dinakaran.