பொது இடங்கள், சமூக வலைதளங்களில் தொழில் ரீதியாக விளம்பரம் வெளியிட்டால் நடவடிக்கை: வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் எச்சரிக்கை

1 month ago 7

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கறிஞர்கள் விளம்பரங்களை வெளியிடுவது பார்கவுன்சில் விதி 36ன்படி சட்டவிரோதமானது. வழக்கறிஞர்கள் நேரடியாகவோ, மறைமுகவோ போஸ்டர், பேனர் மற்றும் சமூக வலைதளங்களில் எந்தவித விளம்பரமும் செய்ய கூடாது. புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் விளம்பரம் வெளியிட்டாலும் அது விதி மீறல்தான். வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நேரத்தில் அதை எந்த வகையில் விளம்பரப்படுத்தினாலும் அவர்கள் பார்கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது. சமூக வலைதளங்களில் ஒரே நாளில் உத்தரவு வாங்கி தரப்படும் எனக்கூறி பலரிடம் பெரும் தொகை பெற்று ஏமாற்றப்படுவது குறித்து புகார்கள் பார்கவுன்சிலுக்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டுமென்று அறிவுறுத்தி உள்ளோம். வழக்கறிஞர்கள், சட்டம் குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த எந்த தடையும் இல்லை. நிலம் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட நிலத்தில் வழக்கறிஞர் விளம்பரம் வைப்பதும் பார்கவுன்சில் விதிகளுக்கு முரணானது. வழக்கறிஞர் விளம்பரம் வெளியிடுவது தொடர்பாக பொதுமக்கள் பார்கவுன்சில் இணையதளம் மூலம் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 

The post பொது இடங்கள், சமூக வலைதளங்களில் தொழில் ரீதியாக விளம்பரம் வெளியிட்டால் நடவடிக்கை: வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article