பைனான்சியர் கார் தீ வைத்து எரிப்பு: மர்ம நபருக்கு போலீசார் வலை

1 week ago 2

காஞ்சிபுரம், பிப்.13: காஞ்சிபுரத்தில் நேற்று நள்ளிரவு பைனான்சியரின் காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் அப்பாராவ் தெரு பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (53). இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டு வாசல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் காரை பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், திடீரென இரவு 12.15 மணிக்கு கார் எரிந்து கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தினர் ராஜேந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் வெளியே சென்று பார்த்தபோது கார் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இதனையடுத்து பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கும், சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை ஊழியர்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏதேனும் முன்விரோதமா, பைனான்ஸ் தொழில் நடத்தி வருவதன் காரணமாக கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இத்தகைய செயலில் ஈடுபட்டார்களா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் லுங்கி அணிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் காரை மூடியிருந்த துணியின் மீது தீ வைத்துவிட்டு சர்வசாதாரணமாக செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post பைனான்சியர் கார் தீ வைத்து எரிப்பு: மர்ம நபருக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Read Entire Article