ஆரணி, பிப்.10: ஆரணி அருகே பைக் மீது பஸ் மோதி 2 தொழிலாளிகள் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கீழ்நகர் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் கோபி(39), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி, இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், கோபி சொந்த வேலை காரணமாக, நேற்று அதேகிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான தனது நண்பர் கணேசன்(37), என்பவரை அழைத்துக்கொண்டு ஆரணி நோக்கி தனது பைக்கில் சென்றார்.
அப்போது, ஆரணி-வேலூர் செல்லும் சாலை சோமந்தாங்கல் கூட்ரோடு வந்தபோது, ஆரணியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார்நாடகா மாநில அரசு பஸ் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கோபி, கணேசன் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தனர்.
தகவல் அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் 2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கோபி மனைவி ரேவதி(34) கொடுத்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post பைக் மீது பஸ் மோதி 2 தொழிலாளிகள் பலி: ஆரணி அருகே சோகம் appeared first on Dinakaran.