கோவில்பட்டி, ஜூன் 7: கோவில்பட்டியில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டியில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ள பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து துறை அலுவலர் கிரிஜாவிடம் புகார்கள் சென்றன. இதையடுத்து அவரது தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெலிக்ஸன் மாசிலாமணி, சுரேஷ் விஸ்வநாத், போக்குவரத்து காவல் உதவியாளர் செல்வகுமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கொண்ட குழுவினர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நின்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகளில் திடீர் சோதனை நடத்தினர். 25 பேருந்துகளில் நடத்திய சோதனையில் 10 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 15 பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பொருத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். காற்று ஒலிப்பான்களை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தாங்களாகவே முன் வந்து அகற்ற வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
The post பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன் பறிமுதல் appeared first on Dinakaran.