
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 55), மர வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்ளும், ஒரு மகளும் இருந்தனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மூத்த மகன் இசக்கி முத்துகுமார் (33), வெல்டிங் வேலையில் ஈடுபட்டார்.
திருமணமாகாத அவர் கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் வெகு நேரமாகியும் இசக்கி முத்துகுமார் வீட்டு அறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது அறை கதவை வெகுநேரமாக தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை. உடனே கதவை உடைத்து கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உத்திரத்தில் இசக்கி முத்துகுமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.பின்னர் இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதைதொடர்ந்து வீட்டில் நடத்திய சோதனையில் இசக்கி முத்துகுமார் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், " தன்னை 2 பேய்கள் அழைப்பதாகவும், ஆகவே அதனுடன் செல்கிறேன்" என்பன வாசகங்கள் உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. தற்கொலை செய்து கொண்ட இசக்கி முத்துகுமார் மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேய்கள் அழைப்பதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு வெல்டிங் தொழிலாளி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.