
டாக்கா,
வங்காளதேச டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நஜ்முல் ஹூசைன் ஷன்டோ சமீபத்தில் விலகினார். தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். இருப்பினும் அவர் ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்காளதேச ஒருநாள் போட்டி அணிக்கு புதிய கேப்டனை நியமித்து வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, வங்காளதேச ஒருநாள் போட்டி அணியின் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 27 வயதான மெஹிதி ஹசன் அடுத்த ஒரு ஆண்டுக்கு கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நஜ்முல் ஹூசைன் இல்லாத சமயத்தில் மெஹிதி ஹசன் 4 ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணியை வழிநடத்தி இருக்கிறார்.
அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் வங்காளதேசம் - இலங்கை அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. அதில் இருந்து அவர் கேப்டன் பொறுப்பை கவனிக்க இருக்கிறார். மெஹிதி ஹசன் மிராஸ் இதுவரை 105 ஒருநாள் ஆட்டங்களில் ஆடி 1,617 ரன்கள் மற்றும் 110 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.