பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் பெரும்பாறை மலைக்கிராமம் உள்ளது. பெரும்பாறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாறை-சித்தரேவு மலைச்சாலையின் இருபுறமும் உள்ள செடிகளில் ரோஸ் மற்றும் வெள்ளை நிறங்களில் சங்குப்பூக்கள் பூத்து குலுங்குகின்றன. சுற்றுலா பயணிகளை வரவேற்று சாலையின் இருபுறமும் தோரணங்களை கட்டி தொங்க விட்டுள்ளதைப் போன்று இவை காட்சியளிக்கின்றன. இவை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தங்களது வாகனங்களை நிறுத்தி சங்குப்பூக்களை அருகில் சென்று ரசிப்பதுடன், அவற்றை செல்போனில் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மழைக்காலத்தில் சங்குப்பூக்கள் அதிகளவில் பூக்கும். தற்போது இப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் சங்குப்பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன’’ என்றனர்.
The post பெரும்பாறை மலைச்சாலையில் பூத்துக்குலுங்கும் சங்கு பூக்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.