சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனிடம் 2ம் நாளாக விசாரணை நிறைவு பெற்றது. நேற்று 5 மணிநேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஜெகநாதன் ஆஜராகி இருந்தார்
அரசு அனுமதியின்றி பவுண்டேஷன் தொடங்கிய விவகாரத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசின் முன்அனுமதியின்றி பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணைப்பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் மீது தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் கருப்பூர் போலீசில் புகார் செய்தார்.
இது தொடர்பாக 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் என போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. அதன்படி, சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி சம்மன் அனுப்பினார். நேற்று துணைவேந்தார் ஜெகநாதன் காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். மாலை 5மணி வரை சுமார் 6மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. நேற்றே இன்று விசாரணைக்கு வருமாறு அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு துணைவேந்தர் ஜெகநாதன் விசாரணைக்கு ஆஜரானார். நேற்று போலவே இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. அது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று மாநாட்டிற்கு வரவிடாமல் தடுத்துள்ளனர் என குறிப்பிட்டு பேசியிருந்தார். அவர் குறிப்பிட்டு பேசியதற்கான பல்வேறு காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளது. பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது நிதி இழப்பீடு மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கருப்பூர் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து ஆஜர்படுத்தினர்.
நீதிபதி வீட்டில் அதிகாலை 1மணிவரை நடந்த விசாரணையில் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து நேரடியாகவே சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு வந்த ஆளுநர், ஜெகநாதனுக்கு அனைவரும் துணையாக இருக்க வேண்டும். நானும் துணையாக இருப்பேன் என கூறி சென்றார். அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட அவருக்கு பணி காலத்தை நீட்டித்து கவர்னர் உத்தரவிட்டிருந்தார். இதன் காரணமாக ஜெகநாதன் மிகுந்த அதிகாரமுள்ளவராக திகழ்ந்தார். இந்த நிலையில் தான் மாநாட்டிற்கு அவர் கண்டிப்பாக வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.
The post பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் 2வது நாளாக விசாரணை நிறைவு appeared first on Dinakaran.