
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு சர்ஜாப்புராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் காதலியை அமர வைத்து கட்டியணைத்தபடியும், முத்தமிட்டுக் கொண்டும் கிளுகிளுப்பாக பயணம் செய்தார். இதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைப்பார்த்த பொதுமக்கள் சிலர் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து சர்ஜாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் பயணித்த மோட்டார் சைக்கிள் தமிழ்நாடு சென்னையை சேர்ந்தது தெரியவந்தது.
இந்தநிலையில் அந்த வாலிபரை சர்ஜாப்புரா போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழ்நாடு சென்னையை சேர்ந்த அஜ்ஜூத்குமார் (வயது 25) என்பது தெரியவந்தது. பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இவர், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் காதலியை கட்டியணைத்து முத்தமிட்டபடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.