பெஞ்சல் புயல் பாதிப்பு: 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

6 months ago 20

சென்னை,

பெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், "பெஞ்சல் புயல் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி தனிநபர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் 50 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்ததால், அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்கட்டமைப்பு மற்றும் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

38,000 அரசு அதிகாரிகள் மற்றும் 1,12,000 பயிற்சி பெற்ற முதல்நிலை பணியாளர்கள் அடங்கிய அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு நான் நேரில் சென்றுள்ளேன்.

தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,475 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று மாநில அரசு மதிப்பிட்டுள்ளது. நாங்கள் சிறப்பாக முயற்சித்த போதிலும், இந்த பேரழிவின் அளவு மாநிலத்தின் வளங்களை பாதித்துள்ளது. அழிவின் தீவிரம் மற்றும் மறுசீரமைப்புக்கான அவசரத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணத் தொகையாக உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article