
சென்னை,
இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாரனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பதால் அவரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக அவரது 'இராவண கோட்டம்' படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
நடிகர் சாந்தனு பாக்யராஜ், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் முன்னிலையில் விக்ரம் சுகுமாரனின் தாயாரிடம், தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி காசோலையை வழங்கினார்.
இந்த இழப்பு குறித்து கண்ணன் ரவி கூறுகையில், "இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் திடீர் இழப்பு எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் திறமையும் ஆர்வமும் ஒருங்கே கொண்ட இயக்குநர். அவரது திறமையை முழுமையாகக் காணும் முன்பே திரைப்படத்துறை அவரை இழந்தது துரதிர்ஷ்டவசமானது. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த பிரார்த்தனைகள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். 'இராவண கோட்டம்' படக்குழுவினருக்கு விக்ரம் சுகுமாரனின் குடும்பமும் எங்களுடைய குடும்பம் போலதான்" என்றார்