பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம்: தலைமை பயிற்சியாளர் கம்பீர் கருத்து

16 hours ago 4

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, பாராட்டு விழா மற்றும் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஆகியவை பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை), சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலில் விதானசவுதாவில் விழா நடந்தது. இதை காண லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

பின்னர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பெங்களூரு அணியினருக்கு பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரிடம் பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

இது தொடர்பாக அவர் கூறியது பின்வருமாறு:- "எனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை. 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றபோது கூட இதையேத்தான் நான் கூறினேன். ஏனெனில் வெற்றி கொண்டாட்டத்தை விட மக்களின் வாழ்க்கை முக்கியமானது. ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்ப நீங்கள் முழுமையாக தயாராக இல்லை என்றால், அதை நடத்தியிருக்கக்கூடாது.

எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்களில் நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். மைதானத்திலோ அல்லது மூடிய அரங்கிலோ இது போன்ற நிகழ்ச்சியை நடத்தலாம். இது மிகவும் துயரமானது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் என் இதயம் இரங்கல் தெரிவிக்கிறது. எதிர்காலத்தில், இதுபோன்ற எதுவும் நடக்காது என்று நம்புகிறேன். இருப்பினும் அப்படி செய்திருக்கக் கூடாது" என்று கூறினார். 

Read Entire Article