
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்.சி.பி அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி வெற்றிக்க்கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே இந்த துயர நிகழ்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் இரங்கல் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: பெங்களூருவில் ஆர்.சி.பி அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது நடந்த பெரும் துயர சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
நெரிசல் ஏற்பட்டது எப்படி?
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆமதாபாத்தில் எதிர்கொண்டது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை வளாகம்), பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையொட்டி நேற்று காலை முதலே விதானசவுதா, சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன்பு ஆயிரக்கணக்கானோர் குவியத் தொடங்கினர். முதலில் விதானசவுதாவில் இருந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு விராட் கோலி, கேப்டன் ரஜத் படிதார் உள்ளிட்ட வீரர்கள் அனைவரும் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்வதாக கூறப்பட்டது. பின்னர் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக திறந்த பஸ்சில் கிரிக்கெட் வீரர்களை ஊர்வலமாக அழைத்து செல்வது ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் சின்னசாமி மைதானத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர். சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என குடும்பத்தினருடன் பலரும் வந்திருந்தார்கள். முதலில் மைதானத்திற்குள் ரசிகர்கள் செல்வதற்கு டிக்கெட் வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.
பின்னர் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. இதன் காரணமாக டிக்கெட் எடுத்து மைதானத்திற்குள் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று ஆர்.சி.பி. அணிக்கான டி.சர்ட் அணிந்து கொண்டு வாலிபர்கள், இளம்பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தார்கள்.
சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் ஒவ்வொரு நுழைவு வாயில் பகுதிகளிலும் ரசிகர்கள் காத்து நின்றனர். பின்னர் டிக்கெட், பாஸ் எதுவும் வேண்டாம், வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்கள் இலவசமாகவே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சின்னசாமி மைதானத்திற்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.மைதானத்தை சுற்றிலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தது. அவர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போலீசாரும் திணறினார்கள். இதற்கிடையில், சின்னசாமி மைதானத்தில் உள்ள 12 மற்றும் 13-வது நுழைவு வாயில் கதவுகள் மட்டும் திறக்கப்பட்டது. அந்த 2 நுழைவுவாயில்கள் வழியாக ரசிகர்கள் உள்ளே செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் மைதானத்தை சுற்றி இருந்த ரசிகர்கள் 12-வது மற்றும் 13-வது நுழைவு வாயில்கள் முன்பாக குவிந்தார்கள். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் முழுமையாக தீவிரசோதனை செய்த பின்பு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் பரிசோதனை செய்த பாதுகாவலர்களையும் இடித்து தள்ளியபடி முண்டியடித்துக்கொண்டு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உள்ளே சென்றார்கள். நுழைவுவாயில் கேட்டையும் உடைத்து தள்ளிவிட்டு ரசிகர்கள் உள்ளே செல்ல முயன்றனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் உண்டானது. இதனால் பாதுகாவலர்களும், போலீசாரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். அதே நேரத்தில் எப்படியும் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்று பெங்களூரு அணி வீரர்களை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முயன்றனர்.
இதனால் கூட்டமாக நின்றவர்கள் மீது சில வாலிபர்கள் ஏறிச்சென்றனர். இதன் காரணமாக பலர் நுழைவு கேட் முன்பாக வலி தாங்க முடியாமல் சரிந்து கீழே விழுந்தார்கள்.இவ்வாறு கீழே விழுந்தவர்களை மிதித்தபடி மற்ற ரசிகர்கள் சென்றார்கள். மறுபுறம் கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மயக்கம் போட்டு விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தார்கள். பின்னர் மயக்கம் அடைந்த சிறுவர், சிறுமிகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.அதேநேரத்தில் கூட்ட நெரிசல் மற்றும் ரசிகர்களின் கால்களில் மிதிப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் மைதானம் முன்பாக ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு உடனே கொண்டு செல்ல முடியாத நிலை உருவானது.
பின்னர் ஒரு வழியாக கூட்ட நெரிசலை விலக்கி விட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதே நேரத்தில் போலீஸ் ஜீப், கார் உள்ளிட்ட வாகனங்களிலும் உயிருக்கு போராடியவர்களை வைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் ஆஸ்பத்திரி மற்றும் விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள வைதேகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 9-ம் வகுப்பு மாணவி உள்பட 11 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். மேலும் காயமடைந்த 33 பேருக்கும் பவுரிங், வைதேகி ஆஸ்பத்திரிகளில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.