பூந்தமல்லியில் தீ விபத்து; குடிசை வீடுகள் எரிந்து சேதம்

2 months ago 12

பூந்தமல்லி: பூந்தமல்லி சர்ச் தெருவில் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் குடிசை வீட்டில் வசித்து வருபவர் சாம்சன். இவரது வீட்டில் மேற்கூரை நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியில் ஓடி வந்தனர். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அணைக்க முடியவில்லை. உடனே இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, பக்கத்தில் இருந்த மற்றொரு குடிசைக்கும் தீ பரவியது.

இதையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 குடிசை வீடுகளில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

The post பூந்தமல்லியில் தீ விபத்து; குடிசை வீடுகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article