சென்னை: பூந்தமல்லி – போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான ரயில் வழித்தட பணிகள் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. பூந்தமல்லி – போரூர் வரை 9.1 கி.மீ. தூர தடத்தில் ஒருவழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. முதற்கட்ட சோதனை 2.5கி.மீ 25 கி.மீ வேகத்தில் இயக்கபட்டது. தற்போது 9.1கி.மீ – 40 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி – போரூர் இடையே ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் போரூர் வரை இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. பூந்தமல்லி – போரூா் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
The post பூந்தமல்லி – போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.