திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர் திறப்பு 12,000 கன அடியில் இருந்து 16,500 கன அடியாக அதிகரித்துள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்று (13.122024) காலை 4.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 34.68 அடியாகவும் கொள்ளளவு 3041மில்லியன் கன அடியாகவும் மற்றும் பூண்டியின் நீர்வரத்து 10,000 கன அடியில் இருந்து 15,500 கன அடியாக அதிகரித்து வருகிறது.
தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக உள்ளதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று 12.12.2024 மாலை 5.00 மணி அளவில் விநாடிக்கு 5000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 13.122024 காலை 10.00 மணி அளவில் விநாடிக்கு 16,500 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம். ஆட்ரம்பாக்கம். ஒதப்பை. நெய்வேலி, எறையூர். பீமன்தோப்பு. கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு. மெய்யூர், வெள்ளியூர். தாமரைப்பாக்கம். திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம். மடியூர். சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம். இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர். சடையான்குப்பம்,எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்கமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு 16,500 கனஅடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!! appeared first on Dinakaran.