
டெல்லி,
உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது. எம்.எல்.ஏ.வாகவும், பின்னர் எம்.பி.யாகவும் செயல்பட்ட ஆதிக் அகமது பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளில் பணியாற்றியுள்ளார்.
இதனிடையே, எம்.எல்.ஏ. கொலை வழக்கில் 2023 ஏப்ரல் 15ம் தேதி கைது செய்யப்பட்ட ஆதிக் அகமது மருத்துவபரிசோதனைக்கு சென்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, போலீசார் முன்னிலையில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரரை 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே, ரவுடி ஆதிக் அகமதுவுக்கு சொந்தமான இடத்தில் வீடு உள்ளது எனக்கூறி 2021ம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டம் லுகர்கஞ்ச் பகுதியில் உள்ள 4 பேரின் வீடுகளை உத்தரபிரதேச அரசு புல்டோசர் கொண்டு இடித்தது. வீடுகள் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றை மாநில அரசு இடித்தது. 2021 மார்ச் 6ம் தேதி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு மறுநாளே (மார்ச் 7) வீடுகள் இடிக்கப்பட்டன.
இதை எதிர்த்து வீட்டின் உரிமையாளர்களான வழக்கறிஞர், பேராசிரியர் மற்றும் 2 பெண்கள் என 4 பேரும் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடிக்கப்பட்ட நிகழ்வு மனிதாபிமானமற்ற செயல் சென்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட்டு, இது மனதை பாதிக்கும் சம்பவம் என கூறியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 4 பேரும் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நிர்வாகம் இந்த இழப்பீட்டை வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.