
மும்பை,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதையொட்டி ஏற்கனவே வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு நடந்தது. 12 அணிகளும் மொத்தம் 83 வீரர்களை தக்கவைத்து இருக்கிறது. இந்த நிலையில் வரும் சீசனுக்கான புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம் மும்பையில் இன்றும், நாளையும் நடக்கிறது.
ஏலப்பட்டியலில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். நட்சத்திர வீரர்களான பவன் ஷெராவத், அர்ஜூன் தேஷ்வால், அஷூ மாலிக், தேவாங் தலால், மனிந்தர் சிங், பர்தீப் நர்வால், நவீன் குமார், பசல் அட்ராசலி உள்ளிட்டோரும் பட்டியலில் அங்கம் வகிக்கின்றனர். இதில் இருந்து 217 வீரர்களை அணிகள் வாங்க இருக்கின்றன.
ஒவ்வொரு அணியிலும் 18 முதல் 25 வீரர்கள் இடம் பெற முடியும். ஒவ்வொரு அணியும் ரூ.5 கோடியை செலவிட முடியும். வீரர்கள் தங்கவைத்ததிற்கு செலவிட்டது போக மீதமுள்ள தொகையை வைத்து ஏலத்தில் வீரர்களை எடுக்க முடியும். வீரர்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 'ஏ' பிரிவினருக்கு ரூ.30 லட்சமும், 'பி' பிரிவினருக்கு ரூ.20 லட்சமும், 'சி' பிரிவினருக்கு ரூ.13 லட்சமும், 'டி' பிரிவினருக்கு ரூ.9 லட்சமும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் ஏலத்தை சாரு ஷர்மாவும், 2-வது நாள் ஏலத்தை மல்லிகா சாகரும் நடத்துகின்றனர். முதல் நாள் ஏலம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.