
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பதவி வழங்காதது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோகித் இல்லாத சூழலில் இந்திய டெஸ்ட் அணியை பும்ரா வழி நடத்தினார். இதனால் பும்ராதான் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது பி.சி.சி.ஐ. எடுத்த சரியான முடிவு என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உண்மையில் இது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். ஜஸ்பிரித் பும்ராவை ஏன் கேப்டனாக தேர்ந்தெடுக்காமல் சுப்மன் கில்லை நியமனம் செய்துள்ளார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் மிகவும் எளிதானது. அதாவது கடந்த சில வருடங்களாகவே பும்ராவை காயங்கள் பிடித்து வருகிறது.
உங்களுடைய கேப்டன் அடிக்கடி காயத்தை சந்தித்து வருவதும் போவதுமாக இருப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். எனவே இது சரியான முடிவு என்று நான் கருதுகிறேன். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை சுப்மன் கில் நன்றாக வழி நடத்தினார். எனவே கேப்டன்ஷிப் அவரிடம் நன்றாக உட்காரும். கேப்டனாக இருக்கும் போது ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் ரன்கள் குவிப்பது முக்கியம்.
அதை ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் செய்தார். எனவே இந்த டைமிங் மிகவும் சரியானது என்று நான் நினைக்கிறேன். முன்னோக்கிச் செல்லும் போது உங்களுக்கு அவர் நிறைய ரன்கள் அடிக்கக்கூடிய நல்ல கேப்டனாக செயல்படுவார்" என்று கூறினார்.