
முல்லான்பூர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் அடித்தார். குஜராத் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 80 ரன்கள் அடித்தார். மும்பை அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் குஜராத் அணியின் பக்கம் வெற்றி வாய்ப்பு இருந்தது. சாய் சுதர்சன் - வாஷிங்டன் சுந்தர் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். அந்த சமயத்தில் பந்தை கையிலெடுத்த பும்ரா கச்சிதமாக பந்துவீசி வாஷிங்டன் சுந்தரை கிளீன் போல்டாக்கினார். அதன் பிறகே வெற்றி வாய்ப்பு மும்பை பக்கம் சென்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிடம், பும்ரா எப்போது பந்து வீச வேண்டும் என நீங்கள் எப்படி முடிவு எடுக்கிறீர்கள்? என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பாண்ட்யா, அது மிகவும் சுலபமானது. போட்டி எப்போதெல்லாம் எங்கள் கையை மீறி செல்கிறது என உணர்கிறோமோ அப்போதெல்லாம் அவரை அழைப்பேன்" என்று கூறினார்.