
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஹர்திக் தலைமையிலான மும்பை மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தலா 44 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல் தொடரில் டி வில்லியர்ஸின் 9 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களை கடந்த போது, ஐ.பி.எல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத ஒருவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய டி வில்லியர்ஸ் 687 ரன்களைக் குவித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 5 அரைசதங்கள் மற்றும் 65.18 என்ற சராசரிவுடன் 717 ரன்களைச் சேர்த்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர் அல்லாத ஒருவர்
சூர்யகுமார் யாதவ் - 717 ரன்கள் (2025)
ஏபி டி வில்லியர்ஸ் - 687 ரன்கள் (2016)
ரிஷப் பந்த் - 684 ரன்கள் (2018)
கேன் வில்லியம்சன் - 622 ரன்கள் (2018)