விழுப்புரம், பிப். 16: விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரி மாநில மதுபாட்டில், சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் இரு மாநில எல்லை சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், நடமாடும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இருந்து வரும் பேருந்துகளையும் போலீசார் சோதனை நடத்தி மதுபாட்டில், சாராயம் கடத்தி வரும் நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் எஸ்பி சரவணன் உத்தரவின் பேரில், தனிப்பிரிவு எஸ்ஐ சண்முகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த பேருந்தில் இறங்கிய ஒருவர் நடந்து சென்றார். அவர் செல்லும்போது நடை, உடையில் சந்தேகம் ஏற்படவே தனிப்படை போலீசார் அவரை பிடித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.
அப்போது அவர் உடல் முழுவதும் புதுச்சேரி மாநில 90 மில்லி அளவு உள்ள 100 மதுபாட்டில்கள், 150 மில்லி அளவு கொண்ட 20 பிராந்தி பாட்டில்கள் என மொத்தம் 120 மதுபாட்டில்களை உடல் முழுவதும் செல்லோ டேப் போட்டு ஒட்டிக்கொண்டு பேருந்தில் நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில், அவர் விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த நாகமணி(40) என்பதும், அப்பகுதியில் கள்ளச்சந்தையில் மது பாட்டில் விற்பனைக்காக நூதன முறையில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து நாகமணியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 120 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்கில் ரகசிய அறை வைத்து 190 மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
இதனிடையே விழுப்புரம் போலீசார் நேருஜி சாலையில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது பைக்கில் நூதன முறையில் பெட்ரோல் டேங்க் இருக்கும் பகுதியில் ரகசிய அறை வைத்து 90 எம்எல் அளவுள்ள 180 மதுபாட்டில்களும், சீட்டு இருக்கையில் 10 குவாட்டர் பாட்டில்கள் என 190 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த சரண்ராஜ்(37), சாலையம் பாளையத்தை சேர்ந்த ஆனந்தபாபு(38) என்பதும், இவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி நூதன முறையில் கடத்தி விழுப்புரத்தில் கள்ள சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. பெட்ரோல் டேங்க் இருக்கும் பகுதியில் ரகசியமாக அறை வைத்தும், பெட்ரோலுக்கு தனியாக சீட்டிற்கு அடியில் சிறிய அளவிலான பெட்டி வைத்தும் மது பாட்டில்களை கடத்தி வந்த இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மதுபாட்டில், பைக்கை பறிமுதல் செய்தனர்.
The post புதுச்சேரியில் இருந்து நூதன முறையில் உடல் முழுவதும் செல்லோ டேப் ஒட்டி 120 மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது விழுப்புரம் பஸ்நிலையத்தில் சிக்கினார் appeared first on Dinakaran.