விழுப்புரம், ஜூன் 26: புதுச்சேரியில் போலி ஆலை நிறுவி தமிழகத்தில் மதுபாட்டில் விற்பனை செய்த வழக்கில் மேலும் 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 8 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பூத்துறை சோதனை சாவடியில் கடந்த மே 9ம் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது போலி மதுபானங்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உளவாய்க்கால் பகுதியில் நிறுவப்பட்ட போலி மதுபான ஆலையை கண்டறிந்து சோதனை செய்தபோது போலி மதுபானம் தயாரித்து தமிழக பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 292 அட்டைப்பெட்டியில் 10,032 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அனுமந்தையைச் சேர்ந்த ராஜசேகர், பால்ஜோசப் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அனுமந்தை ராஜசேகர், சென்னை ராமாபுரம் பாண்டியன், செவிடங்குப்பம் மூர்த்தி, புதுச்சேரி கொம்பாக்கம் பிரபு, புதுச்சேரி உளவாய்க்கால் ரமேஷ்(எ) அதியமான் ஆகிய 5 பேர் ஏற்கனவே தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று மேலும் 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்த சக்திவேல்(43), மரக்காணம் ரவிச்சந்திரன்(67), டி.நல்லாளம் பிரகாஷ்(36) ஆகிய மூன்று பேரும் தடுப்புகாவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்பி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஷேக் அப்துல்ரஹ்மான் நேற்று அதற்கான உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து ஆரோவில் காவல் நிலைய போலீசார் மூன்று பேரையும் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதுவரை போலி மதுபான வழக்கில் 8 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post புதுச்சேரியில் ஆலை நிறுவி தமிழகத்தில் போலி மது விற்ற வழக்கில் மேலும் 3 பேர் தடுப்பு காவலில் கைது appeared first on Dinakaran.