புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று 15 மதுக் கடைகளுக்கு கலால் துறை சீல் வைத்தது. புதுவை மாநிலத்தில் மதுக் கடைகளுக்கு ஆண்டு தோறும் உரிமம் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில் கடந்த 2024-ஆம் ஆண்டு 396 மதுக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. அவை 2025-ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் செயல்படவும், அதற்குப் பின் உரிமத்தைப் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருநதன. அதனடிப்படையில் புதுச்சேரி நகர் பகுதியிலும், பாகூர் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் உரிமம் பெற்றவைகளில் 381 மதுக்கடைகளின் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுக்கடை உரிமத்தைப் புதுப்பிக்காதவர்களுக்கு கலால் துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆனால், எச்சரிக்கைக்குப் பிறகும் மதுக் கடைகளின் உரிமத்தைப் புதுப்பிக்காத கடைகளுக்கு சீலிட கலால் துறை வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதனடிப்படையில் புதுச்சேரி முதலியார்பேட்டை, சின்னக்காலாப்பட்டு, எல்லைப்பிள்ளை சாவடி, பாகூர் உள்ளிட்ட இடங்களில் 15 மதுக் கடைகளுக்கு சீலிடப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா தெரிவித்தார்.