புதுக்கோட்டை, ஜூன் 5: புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் 1799 குழந்தைகள் மையங்களில் சத்து மாவு, ஊட்டச்சத்துடன் கூடிய உணவு மற்றும் முன்பருவக்கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் 1799 குழந்தைகள் மையங்களில் சத்து மாவு, ஊட்டச்சத்துடன் கூடிய உணவு மற்றும் முன்பருவக்கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன. குறிப்பாக 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக்கல்வி, செய்கை பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகின்றது. இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடிப் பணியாளர்கள் தற்போது வீடுகள் தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பெற்றோர் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜூன் 2025ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால் அச்சேவையையும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் 1799 குழந்தைகள் மையங்களில் ஊட்டச்சத்துணவு, முன்பருவக்கல்வி வழங்கல் appeared first on Dinakaran.