கோவை: திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் மின்சார ஆம்னி பேருந்து, கருமத்தம்பட்டி அருகே தடுப்புச் சுவாில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் 17 பயணிகள் காயமடைந்தனர்.
திருச்சியில் இருந்து நேற்று (ஜூன் 28) இரவு 10.30 மணிக்கு மின்சார ஆம்னிப் பேருந்து கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓட்டுநர் பசுபதி ஓட்டி வந்தார். பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர். இப்பேருந்து கருமத்தம்பட்டியைக் கடந்து, தனியார் உணவகம் அருகே இன்று (ஜூன் 29) அதிகாலை வந்தபோது, பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
பேருந்து மோதிய வேகத்தில் அதில் அமர்ந்திருந்த பயணிகள் இருக்கையில் இருந்து கீழே விழுந்தனர். விபத்தால் அதிர்ந்த பயணிகள் அலறி அபயக்குரல் எழுப்பினர். இதைப் பார்த்த பின்னால் குஜராத்தில் இருந்து சூலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்தினார். பேருந்து கண்ணாடியை உடைத்து அதிலிருந்த பயணிகளை மீட்டனர்.