
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.5.2025) புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தை அரசு உயர் அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவிகளுடன் அவர்கள் மேற்கொண்டு வரும் விளையாட்டு பயிற்சி குறித்தும், பெற்றுள்ள பதக்கங்கள் குறித்தும் கலந்துரையாடி கேட்டறிந்து, அவர்கள் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாகவும், சர்வதேச அளவிலும் பதக்கங்கள் வெல்வதற்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தடகளத்தில் 2 வெள்ளி, 1 வெண்கலம் மற்றும் வளைகோல் பந்து விளையாட்டில் 3 வெள்ளி, 1 வெண்கலமும் வென்று சாதனனை படைத்துள்ளனர். மேலும் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், 3 வெள்ளி 8 வெண்கலமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆய்விற்கு பின் செய்தியார்களுக்கு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அனைவரும் சேர்ந்து இன்றைக்கு காலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அரசினுடைய அனைத்து பணிகளின் சார்பாக சென்ற ஆண்டு ஒரு விரிவான ஆய்வு (Detail Review) வைத்திருந்தோம். இந்த முறை அதற்கான ஒரு followup action-க்காக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் இன்றைக்கு ஒரு Review meeting நடத்தியிருக்கின்றோம். சில பணிகளில் சுணக்கங்கள் இருப்பதனால், எதனால் சுணக்கம் என்று கேட்டு, அந்த பணிகள் எல்லாம் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றோம்.
இன்று அந்த ஆய்வு பணிகளை முடித்துவிட்டு, அன்றைக்கு புதுக்கோட்டையில் 2015-ம் ஆண்டு இந்த Sports facility Multi Purpose Hall கட்ட ஆரம்பித்தார்கள். அதன் பின்பு நிதி நெருக்கடி காரணமாக அப்படியே கைவிட்டார்கள். இது தொடர்ந்து யாராலும் பயன்படுத்த முடியாத ஒரு சூழலில் இருந்தது. இதற்கு மேலும் ஒரு 4.50 கோடி ரூபாய் தேவைப்படும் என்று அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது சொன்னார்கள்.
முதல்-அமைச்சர் என்னை அழைத்து உடனே என்னவென்று பார்த்து, உடனே அந்த பணிகளை எல்லாம் ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னதுடன், உடனடியாக முதல்-அமைச்சர் 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தந்துள்ளார்கள். மீதம் இருக்கும் ஒரு கோடிக்கு இங்கு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் எல்லாம் அவர்களின் பங்கினை தருவதாக சொல்லியிருக்கின்றார்கள்.
எனவே, விரைவில் அந்த பணிகள் துவங்க இருக்கின்றது. வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் எல்லாம் முடித்து வைக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் பயன்பெறுகின்ற அளவில் இந்த Indoor Multi Purpose Hall கண்டிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு நிச்சயமாக உபயோகமாக இருக்கும் என நம்புகின்றோம்.
இதில் Shurtle Court வரப்போகிறது, Indoor Kabadi Court வரப்போகிறது, Boxing Hall ஒன்று வரப்போகிறது, Gallary அமையப்போகிறது. இப்படி பல்வேறு வசதிகளோடு நவீனமயமாக்கப்பட்ட இந்த புதுக்கோட்டை Multi Purpose Sports Hall வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு செயல்படத் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், கூடுதல் செயலாளர் ஆர்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.