![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38302187-national-03.webp)
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முக்கியமாக புதிய வருமான வரி மசோதாவை மத்திய மந்திரிசபை ஆய்வு செய்தது. 60 ஆண்டுகள் பழமையான வருமான வரிச்சட்டத்துக்கு பதிலாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த மசோதாவுக்கு மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.
நேரடி வரிச்சட்டத்தை எளிதாக புரிந்து கொள்ள இந்த மசோதா உதவும் எனவும், இதில் விதிகள் மற்றும் விளக்கங்கள் அல்லது நீண்ட வாக்கியங்கள் எதுவும் இருக்காது என்றும் நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. மந்திரிசபை ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதால், இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"புதிய வருமான வரி மசோதா நேற்று மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா அடுத்த வாரம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். பின்னர் அது நாடாளுமன்ற குழுவிற்கு அனுப்பப்படும். அந்த குழுவின் பரிந்துரைகள் மந்திரிசபைக்கு அனுப்பப்படும். அந்த பரிந்துரைகளுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்த பின், மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்."
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.