புதிய நிதி சட்டத்தின்படி ஓய்வூதியதாரர்களின் சலுகைகள் பறிப்பா? - மத்திய அரசு விளக்கம்

1 day ago 3

புதுடெல்லி,

மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்த சூழலில், மத்திய அரசு சமீபத்தில் நிதி சட்டம் 2025-ஐ அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின்படி, 'அரசின் கொள்கை மாற்றத்தால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி சட்டம் 2025, அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றதற்கு பின்னர் பெறும் பல்வேறு வகையான பலன்களையும், சலுகைகளையும் பறிப்பதாக உள்ளது.

அந்த சட்டத்தில் உள்ள பிரிவுகளின்படி, அடுத்து வர உள்ள 8-வது ஊதியக்குழு பரிந்துரையில் ஓய்வூதியதாரர்கள் ஊதிய உயர்வு சலுகைகள் அல்லது பஞ்சப்படி உயர்வு பெற தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்' என்ற தகவல் வாட்ஸ்-அப், எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவும் இந்த தகவல் மத்திய-மாநில அரசுகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவம், பிள்ளைகளின் படிப்பு செலவு, வீடு, வாகனங்களுக்கான கடன் என பல்வேறு தேவைகளுக்காக ஓய்வூதியத்தை நம்பி இருப்பவர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. இதையடுத்து இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த தகவல் தவறானது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் எந்த மாற்றமும் இல்லை. 2021-ம் ஆண்டு திருத்தப்பட்ட ஓய்வூதிய விதிகளின்படி பொதுத்துறை ஊழியர் தவறான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டால், அவருடைய ஓய்வூதிய பலன்கள் பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது" என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article