
சென்னை,
சென்னை புரசைவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கங்காதீசுவரர் கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கோவில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய 2 தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள கங்காதீசுவரர் மேல்நிலைப்பள்ளி, இ.எல்.எம். பள்ளி, எம்.சி.டி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எம்.சி.டி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மேல்நிலைப்பள்ளி, இவாட்ஸ் பள்ளி, வெள்ளாளர் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி ஆகிய 7 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21-ந்தேதி (சனிக்கிழமை) இந்தப்பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேரோட்டம் நடக்கும் கங்காதீசுவரர் கோவில் நுழைவாயில் (தொடங்கும் இடம்) - கங்காதீசுவரர் கோவில் வீதி, டாக்டர் அழகப்பா சாலை, ஆடியப்பா தெரு, வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சுமூக விநாயகர் கோவில் சந்திப்பு, கங்காதீசுவரர் கோவில் நுழைவாயில் (நிறைவு பெறும் இடத்தின்) வழியாக காலை 6 மணியிலிருந்து பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று போக்குவரத்து போலீசார் கூறி உள்ளனர்.