‘புகையிலை இல்லாத இளைஞர்கள்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, தமிழகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய விருதை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிகரெட், இதர புகையிலை பொருட்கள் தடுப்பு (2003) சட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் புகைபிடிக்க தடை, புகையிலை பொருள் விளம்பரத்துக்கு தடை, புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை புகைப்படம் அச்சிடுவது, கல்வி நிறுவனங்களை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரையும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் புகையிலை பொருட்களை விற்க தடை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.