
பாட்னா,
பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், உடல் அளவில் களைத்துப்போய் விட்டார். மனதளவில் ஓய்வு பெற்று விட்டார். அவரது மந்திரிகளின் பெயர்களைக் கூட அவரால் சொந்தமாக சொல்ல முடியாது.
நிதிஷ்குமார் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. அதனால் அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தயங்குகிறது. அவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சவால் விடுக்கிறேன். இந்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவார். ஆனால், தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்து அணி மாறிவிடுவார்" இவ்வாறு அவர் கூறினார்.