
பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி எடுத்து வந்தது. இந்த நிலையில், தற்போது அங்கு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த ஓரிரு தினங்களாக பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளை கனமழை புரட்டி எடுத்தது. மேலும் மழையோடு புயல் காற்றும் வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன.
மழையை தொடர்ந்து பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கார்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை எதிரொலியாக சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இதனிடையே, கனமழையால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பிரான்சில் 12 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்ததாகவும், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மழைநீர் கசிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவையில் உரையாற்றிய பிரதமர் பிரான்கோயிஸ் பெய்ரு, அவையின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதை அங்குள்ள ஊழியர்களிடம் சுட்டிக்காட்டினார். இதையடுத்து நாடாளுமன்ற துணை தலைவர் ரோலண்ட் லெஸ்கர், அவையை சிறிது நேரம் ஒத்திவைத்தார். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு அவை மீண்டும் கூடியபோதும், மழைநீர் கசியாமல் இருக்க நடவடிக்கை தேவையான எடுக்கப்பட்டுள்ளதாக ரோலண்ட் லெஸ்கர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.