
திருமலை,
சிம்ம வாகனம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோவிந்தராஜசாமி, அனந்ததேஜாமூர்த்தியாக எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகனத்தின் முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. கலைக்குழுவினரின் கோலாட்டங்கள், பக்தி பஜனைகள் நடந்தன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
முத்துப்பந்தல் வாகனம்
அதன்பிறகு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பலவகை பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.