பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: அனுமன் வாகனத்தில் திருப்பதி கோவிந்தராஜசாமி வீதிஉலா

3 hours ago 1

திருமலை,

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதிஉலா முன்னால் கலைஞர்கள் நாட்டிய, நடனம், பக்தி பஜனை, மங்கள வாத்திய இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

அதன்பிறகு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

யானை வாகன வீதிஉலா

அதைத்தொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோவிந்தராஜசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் திருமலை மடாதிபதிகள், கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

Read Entire Article