வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள்

3 hours ago 3

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை வெகு விமர்சையாக நடக்கிறது.

இதையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது.

வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். தரிசனம் செய்யும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார வசதிகள் ஆங்காங்கே கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரத்து 500 சதுர அடியில் நிரந்தர நிழல் கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக வரக்கூடிய பக்தர்களுக்கு இன்று காலை 8 மணியில் இருந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி. டபிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாத யாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை அங்கு செயல்பட்டு வருகிறது. அந்த தனி வரிசையில் வரக்கூடிய மூத்த குடிமக்களுக்கு இன்று காலை 6 மணியில் இருந்து 10-ந்தேதி மாலை 6 மணி வரை மக்கள் தொடர்பு அலுவலர், அதிகாரிகள் அலுவலகத்தில் கைப்பட்டை வழங்கப்படுகிறது. கைபட்டை வழங்கும் முதியோர்களுக்கு தனியாக எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இதை மூத்த குடிமக்கள் மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு கைப்பட்டை வாங்கி பயன்படுத்தி பயனடையுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Read Entire Article