பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரி வழக்கு தள்ளுபடி

6 hours ago 1

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேசியதாகவும், அப்போது ஏ.கே.47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் சீமான் கூறி வருகிறார். இதுகுறித்து அவர் பிரசாரமும் செய்கிறார்.

ராஜீவ்காந்தி கொலை சம்பவத்துக்கு பின்னர், விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால், பிரபாகரனுடன் இருப்பது போல மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சீமான் வெளியிட்டு, மக்களிடையே வன்முறையை தூண்டி வருகிறார். அரசியல் ஆதாயங்களுக்காக பிரபாகரனின் புகைப்படங்களையும் பயன்படுத்தி வருகிறார். இதற்கு தடை விதிக்கவேண்டும் என்று அரசு மனு அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லை'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், சுந்தர்மோகன் ஆகியோர் விசாரித்து, ''அரசு கோரிக்கை மனு அனுப்பி 15 நாட்கள் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோரிக்கை மனுவை அரசு பரிசீலிக்க அவகாசம் வேண்டாமா?'' என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Read Entire Article