
சென்னை,
பிரபல இயக்குனர் கவுதமனின் மகன் தமிழழகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அனகாபுத்தூரை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளர் சண்முகம் நேற்று இரவு அண்ணாநகர் இரண்டாவது நிலச்சாலை அருகே ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இருவர் அந்த ஆட்டோ மீது மோதினர். இதனை தட்டிக்கேட்ட சண்முகத்தை இருவரும் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, இருவர் மீதும் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சண்முகம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், அது இயக்குனர் கவுதமனின் மகன் தமிழழகன் மற்றும் அவரது நண்பர் என்பது தெரிய வந்தது. இருவரும் மதுபோதையில் அவரை தாக்கியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.