பிரதோஷத்தில் ஐந்து வகை

5 hours ago 1

பிரதோஷத்தில் ஐந்து வகை

1. நித்தியப் பிரதோஷம், 2. பக்ஷப் பிரதோஷம், 3. மாதப் பிரதோஷம், 4. மகா பிரதோஷம், 5. பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.
நித்தியப் பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், ‘நித்தியப் பிரதோஷம்’ எனப்படும்.
பக்ஷப் பிரதோஷம்: வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.
மாதப் பிரதோஷம்: தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘மாதப் பிரதோஷம்’ எனப்படும்.
மகா பிரதோஷம்: சிவபெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக் கிழமையன்று என்பதால், சனிக் கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படும்.
பிரளய பிரதோஷம்: பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே ‘பிரளய பிரதோஷம்’ என அழைக்கப்படுகிறது.

பிரதோஷ நடன ஓவியம்

கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி (வெள்ளைப் பிள்ளையார் கபஸ்தீஸ்வரர்) ஆலயத்தில் பிரதோஷ நடனத்தை விளக்கும் தொன்மைக்கால ஓவியம் ஒன்று விதானத்தில் உள்ளது. இதில் விஷ மருந்திய பெருமான் சந்தியாதாண்டவத்தை ஆடுகின்றார். தேவர்களும் கணங்களும் பலவகையான வாத்தியங்களை இசைக்கின்றனர். வாசுகி என்ற பாம்பு பெருமானுக்குப் பிரபா மண்டலம் போல விளங்குகின்றது. பெருமான் நடனமாடும்போது அவர் திருவடியின் கீழ் இருக்கும் முயலகன் அச்சத்தால் ஓடி தனியாக நின்று அவருடைய ஆட்டத்தை கண்டுகளிக்கிறான். அம்பிகையும் தேவர்களும் சிவபெருமானின் ஆட்டத்தை பார்த்து வியந்து நிற்கின்றனர். இத்தகைய ஓவியம் வேறெங்கும் இல்லை என்று கூறுகின்றனர்.

பிரதோஷ ரிஷப வாகனம்

சிவபெருமான் பிரதோஷ காலங்களில் உலா வருவதற்காகச் சிறிய அளவில் அமைந்த ரிஷப வாகனமே பிரதோஷ ரிஷபம் எனப்படும். இது மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டதாகும். மயிலாப்பூர் முதலிய பல தலங்களில் வெள்ளியால் அமைந்த பிரதோஷ ரிஷப வாகனங்களைக் காணலாம். சென்னை சிவா விஷ்ணு ஆலயத்தில் பித்தளையால் ஆன பிரதோஷ ரிஷபம் உள்ளது. பிரதோஷ காலத்தில் வலம் வரும் இந்த நந்தியைச் சுற்றி வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர் சிற்பங்களையும் அமைக்கின்றனர். திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் இடபத்திற்குப் பதிலாக அதிகார நந்தியில் பிரதோஷ நாயகரை அமர்த்தி உலாவரச் செய்யும் வழக்கம் உள்ளது.

அறுகு அர்ச்சனை

சிவபெருமானுக்கு உரிய பத்திரங்களில் தூர்வா பத்திரம் எனும் அறுகு என்கிற அறுகம்புல்லும் சிறப்புடையதாகும். விஷ வேகத்தாலான தீயைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற சிவபெருமானுக்குக் குளிர்ச்சியைத் தருவதும், வெப்ப வேதனைகளைத் தவிர்ப்பதுமாகிய அறுகம்புல்லால் அர்ச்சனை செய்கின்றனர். அறுகம்புல்லாலான ஆசனத்தை அமைத்து அந்த தூர்வாசனத்தின் மீது அமர்ந்து கொண்டு பிரதோஷ காலங்களில் சிவமூர்த்தியைத் தியானம் செய்வது நலமுடையதாகும். இவ்வேளையில் அறுகம்புல்லைக் கட்டி மாலையாக சிவலிங்கத்திற்கும், நந்தி தேவருக்கும் அணிவிக்கின்றனர். அறுகம்புல் விஷத்தை நீக்கும் ஆற்றல் படைத்தது.

அமுதாம்பிகை

சிவபெருமான் விஷமருந்தியபோது அதனை அமிர்தமாக்கியவள் அம்பிகை பார்வதி தேவியே ஆவாள். இதனால் அவளுக்கு அமிர்தேஸ்வரி என்பது பெயராயிற்று. அபிராமிபட்டர் அபிராமி அந்தாதியில் அருந்திய நஞ்சை அமுதம் ஆக்கிய அம்பிகை என்று குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும். இவ்வாறு சிவன் உண்ட நஞ்சை அமிர்தமாக்கித் தன்னுடைய மாங்கல்யத்தைக் காத்துக் கொண்டதுடன் அந்த விஷம் பிறரை வருத்தாது இந்திராணி முதலான அனைவரின் மாங்கல்யத்தையும் காத்ததால் அவள் மங்களேஸ்வரி என்று பெயர் பெற்றாள்.

இவ்வாறு படுத்துக் கொண்டதை அறிந்த தேவர்கள் கலங்கினர். எல்லோரும் அவரைப் போற்றித் துதி பாடியவாறு இருந்தனர். ஏகாதசியன்று விஷத்தை உண்ட சிவபெருமான் துவாதசி முழுவதும் பள்ளிகொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து உமையவளை ஒரு பக்கம் கொண்டு சூலத்தைச் சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நடனம் ஆடினார். இந்த நாட்டியத்தைக் கண்ட தேவர்கள் அஞ்சியதுடன், மகிழ்ச்சியும் கொண்டனர். இந்த நடனத்திற்கு நந்திதேவர் மட்டும் சுத்த மத்தளம் வாசித்தார். அனைவரும் ஹர… ஹர… என்று துதித்தனர்.

அவருடைய நீலகண்டத்தையும் அவர் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு விடம் உண்டதையும் போற்றி பதிணென் கணங்களும் பலவகையான வாழ்த்தி வணங்கினர்.(அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்தி வேளையில் இக்கூத்தை நிகழ்த்துகின்றார். இக்கூத்தில் சரஸ்வதி வீணையையும், திருமால் தாளத்தையும், நந்தி மத்தளத்தையும், திருமால் புல்லாங்குழலையும் பூத கணங்கள் எண்ணற்ற இசைக் கருவிகளையும் இசைக்கின்றனர் என்பர்.) பிறகு, மீண்டும் தேவர்கள் பாற்கடல் கடைந்து அமிர்தம் பெற விரும்ப, அதற்குச் சிவபெருமானின் அனுமதியைக் கேட்டனர். அவரும், ‘‘அப்படியே செய்யுங்கள்’’ என்று ஆசியளித்து அனுப்பினார். பின்னர், தேவர்களும் அசுரர்களும் தங்கள் களைப்பை நீக்கிக் கொண்டு புத்துணர்ச்சியுடன் பாற்கடலை அடைந்து அதனை முன்போலவே கடையத் தொடங்கினர்.

விஷாபஹரண மூர்த்தி

நீலகண்ட பரமேஸ்வரரின் விஷமருந்திய திருவடிவைச் சிவாகமங்கள் விஷாபஹரண மூர்த்தி என்று குறிக்கின்றன. அபகரணம் என்பதற்கு ஏற்றுக்கொள்ளுதல் என்பது பொருள். எனவே, விஷத்தை விரும்பி ஏற்று அருந்திய பெருமானை விஷாபஹரணர் என்று அழைக்கின்றனர். இம்மூர்த்தியின் வடிவை இரண்டு நிலையில் சிற்ப நூல்கள் குறிக்கின்றன. முதல் வகையில் காரணமாகமம் இம்மூர்த்தியைப்பற்றிக் குறிப்பிடுவதைக் காணலாம். இவர் ஜடாமகுடம் தரித்து மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டவராக விளங்குகின்றார். மேற்கரங்களில், மானும், மழுவும் கொண்டவராய் முன் கரங்களில் இடது கையைத் தேவர்களுக்கு அபயமளிக்கும் பாவனையிலும் வலக்கரத்தில் விஷம் நிறைந்த பாத்திரத்தையும் கொண்டவராகவும் விளங்குகின்றார். அவர் விஷம் அருந்த முற்படுபவராகவும், அருகிலுள்ள பார்வதிதேவி சிவபெருமானைத் தழுவிக் கொண்டு வலக் கரத்தால் அவருடைய கழுத்தைப்பற்றி அவ்விஷத்தை அவருடைய கண்டத்தில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் முகத்தில் வேதனையும், குழப்பமும் கொண்டவளாக விளங்குகின்றாள்.

மற்றோர் வகையில் அம்மூர்த்தியைத் தழல்முடி கொண்டவராக விழித்த பார்வையும், கோரைப்பல் துலங்க புலித்தோலாடை அணிந்து சிறுமணிகளால் ஆன மாலையையும் தேள்களால் கோர்க்கப்பட்ட மாலையையும், பாம்பணிகளையும் அணிந்தவராகச் சித்தரிக்கின்றனர். இவர் முன் வலக் கரத்தில் விஷப் பாத்திரத்தையும், முன் இடக்கரத்தில் அஞ்சி நிற்கும் தேவியை அணைத்து அச்சம் நீக்குபவராகவும், பின் வலக் கரத்தில் திரிசூலத்தையும் பின் இடக்கரத்தில் மணியையும் (சிலர் கபாலம் எனவும் எழுதுவர்) ஏந்தியவராகக் காட்சியளிக்கின்றார். இருவரும் இடப வாகனத்தில் வீற்றிருக்கின்றனர். சிதம்பரம், மதுரை முதலான திருத்தலங்களில் விஷாபஹரண மூர்த்தியை ஓவியமாகவும் சிற்பமாகவும் அமைத்துள்ளனர். ஆனால், இவை யாவும் ஆகமம் கூறும் வகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல நூல்களில் விஷாபஹரண மூர்த்தியைப் பள்ளிகொண்டிருப்பவராகவும் அவருக்குப் பார்வதிதேவி பணிவிடை புரிபவளாகவும் சித்தரித்திருக்கின்றனர்.

The post பிரதோஷத்தில் ஐந்து வகை appeared first on Dinakaran.

Read Entire Article