திருச்சி.பிப்.7: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் பெற விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பிரதம மந்திரி திட்டத்தின் கீழ், கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லலூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவ மாணவியருக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்து 50ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 2024-2025-ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், University Management Information System (UMIS) (https://umis.tn.gov.in/) என்ற இணையதளம் மூலம் வரவேற்க செயல்பாட்டிற்கு வந்து உள்ளது. கல்வி உதவித்தொகைக்கு மாணவ, மாணவியர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் எனவும், கல்வி உதவித் தொகை விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் பிப்.28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுப்பித்தல், ஏற்கனவே கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024-2025ம் ஆண்டில் 2,3 (ம) 4ம் ஆண்டு பயின்று வரும் புதுப்பித்தல் மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அம்மாணவ மாணவியர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். புதியது விண்ணப்பிக்க, நடப்பு கல்வியாண்டில் (2024 -2025) புதிதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற (ம) சென்ற வருடத்தில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணாக்கர்கள் https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். முதல் தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்படி விவரங்களை மாணவ, மாணவியர்களுக்கு தெரிவித்து BC, MBC & DNC வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சந்தேகங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2ம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அலுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.