சென்னை: பி.எம். ஸ்ரீ பள்ளி திட்ட நிதியை வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுவதாக பாஜக பொய் தகவல் பரப்புகிறது என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் நிதி வாங்கிவிட்டு, அந்த நிதியை அதற்காக உபயோகப்படுத்தாமல், சர்வ சிக்ஷா அபியானில் வேலைக்குச் சேர்ந்த ஆசிரியர்களை வைத்து கணக்கு காண்பிப்பதாக’ பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பொய்யான தகவலைப் பரப்பியுள்ளனர்.
ஒன்றிய அரசின் பி.எம் ஸ்ரீ இணையதளத்தில், தமிழ்நாட்டில் 34 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டுமே பி.எம் ஸ்ரீ பள்ளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிலையில், மாநில அரசின் எந்தப் பள்ளிகளும் பி.எம் ஸ்ரீ பள்ளிகளாகச் செயல்படுத்தப்படாத நிலையில், ஒன்றிய அரசு எப்படி நிதி ஒதுக்கியிருக்கும். ஒதுக்கப்படாத நிதிக்குத் தமிழ்நாடு அரசு எப்படி போலியாகக் கணக்கு காண்பித்திருக்க முடியும்.
ஏற்கெனவே, செயல்படுத்தப்படும் ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்திற்கான ரூ.2,152 கோடி நிதியையே ஒன்றிய அரசு தற்போதுவரை ஒதுக்கவில்லை. இந்த திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைந்து நிதியை வாங்கிவிட்டதாகப் பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பி.எம். ஸ்ரீ பள்ளி திட்ட நிதியை வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுவதாக பாஜக பொய் தகவல் பரப்புகிறது: உண்மை சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.