சென்னை: பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நேற்று நடந்த ‘தமிழ் வார விழா’ நிறைவு விழாவில், 5 தமிழறிஞர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுக்கு நூலுரிமை தொகை மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய பின், வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: திராவிட இன எழுச்சி – பொங்கும் தமிழ் உணர்வு – பெண் விடுதலை – சமத்துவம் – சமூகநீதி – தமிழ் இலக்கிய அழகியல் – தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு அடையாளம் பாவேந்தர் பாரதிதாசன். எங்கும் அவர் கவிதைகள் முழங்கிடக் கண்டு உள்ளம் பொங்குகிறது, பெருமகிழ்ச்சியால்; பேருணர்ச்சியால்! தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை. தமிழ்நாடெங்கும் நடந்த தமிழ் வார விழாவில் பங்கெடுத்த இளைஞர் பட்டாளமே, பாவேந்தரால் பரிசுகள் வென்றீர்; வாழ்த்துகள். இது போதுமா நம்முடைய களம் பெரிது – அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும். தங்கத்தமிழ் தந்த அவரது புகழ் ஓங்குக! தமிழர் வெல்க! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும் கொண்டு செல்ல முதல்வர் வேண்டுகோள் appeared first on Dinakaran.