
சென்னை,
த.ம.க. தலைவர் ஜி.கே.வாசன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது தான் இதற்கு காரணம்.
தமிழக அரசு, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிகள், பெண்கள் மற்றும் முதியோருக்கான பாலியல் தொந்தரவுகள் தொடர்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் பாலியல் வன் கொடுமைக்கு எதிரான காவல்துறையினரின் நடவடிக்கைகள் முறையானதாக அமையவில்லை. குறிப்பாக சென்னையில் மன நலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் மீது இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
அதாவது இந்த பாலியல் வன் கொடுமை குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதற்கான நடவடிக்கைள் முறையாக எடுக்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளிவருகின்றன.