சென்னை: பாலியல் குற்றச்சாட்டால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இணை ஆணையர் மீது சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் வீடு கட்ட ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி பொய்புகார் அளித்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகாரும் அளித்துள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார், தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக பெண் போலீஸ் ஒருவர் டிஜிபியிடம் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றினார்.