
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் மெட்சால் பகுதியில் உள்ள தனியார் நிறுனத்தில் வேலை செய்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 22-ந்தேதி செகந்தராபாத் நோக்கி செல்லும் பயணிகள் ரெயிலில் ஏறியுள்ளார். அந்த ரெயிலின் பெண்கள் பெட்டியில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அந்த பெட்டியில் பயணித்த 2 பெண்கள் அல்வால் ரெயில் நிலையத்தில் இறங்கிய நிலையில், இளம்பெண் மட்டும் பெண்கள் பெட்டியில் தனியாக இருந்துள்ளார். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏறியதோடு, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன இளம்பெண், ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்தார். இதில் அந்த பெண்ணின் தலை, தாடை, வலது கை மற்றும் மணிக்கட்டு ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. படுகாயமடைந்த இளம்பெண்ணை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்கு பிறகு தற்போது இளம்பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இளம்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். தனக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை மீண்டும் ஒருமுறை பார்த்தால் அவரை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என இளம்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.