
சென்னை,
அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி அளவில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அந்த கூட்டங்களில் பாலியல் தீங்குகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் குறித்தும், அதில் இருந்து அவர்களை பாதுகாப்பது குறித்தும் விவாதித்து பிரசாரங்கள் வாயிலாக மாணவர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க தேவையான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல் குறித்து நம்பிக்கையானவர்களிடம் தெரிவிப்பது மற்றும் அதுகுறித்து புகாரளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஏற்படுத்தவேண்டும். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கொண்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, மாணவர் மனசு பெட்டி, மாணவர்களின் உடல்நலன் குறித்தும் இந்த கூட்டங்களில் பேசப்பட வேண்டும் என உத்தரவிட்ப்பட்டுள்ளது.