மதுரை: ராமேசுவரத்தில் அமைந்துள்ள பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிப்ரவரி 11-ல் திறக்க ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாகியுள்ளன. புதிய பாலத்தில் முதல் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் - மண்டபம் இடையே பாம்பன் கடலில் ஏற்கெனவே இருந்த பழைய தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதிய பாலம் அமைக்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதற்காக 2022-ல் அப்பாலத்தில் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் தடை செய்தது. தொடர்ந்து 2023 பிப்ரவரி முதல் பழைய பாலத்தில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையம் வரையிலுமே இயக்கப்பட்டன.